தளபதி 67: தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் தமிழில் ‘வாரிசு’ என்றும், தெலுங்கில் ‘வாரிசுடு’ என்றும் வருகிற பொங்கலன்று ஜனவரி 12ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று சமீபத்தில் படக்குழு அறிவித்திருந்தது. இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா கடந்த வாரம் மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற நிலையில் இப்படத்தின் டிரெய்லர் எப்போது வெளியாகும் என்று விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் இந்த படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகிய நிலையில் அண்மையில் இப்படத்திற்கான பூஜையும் ரகசியமாக நடந்து முடிந்துள்ளது. ‘மாஸ்டர்’ பட வெற்றிக்குப் பிறகு விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் மீண்டும் இணைய உள்ளனர். சமீபத்தில் நடைபெற்ற பேட்டி ஒன்றின் மூலம் இயக்குனர் கெளதம் மேனன் இப்படத்தில் நடிக்க உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நடிகை த்ரிஷா நீண்ட இடைவெளிக்கு பிறகு கில்லி, ஆதி, திருப்பாச்சி, குருவி உள்ளிட்ட படங்களுக்கு பிறகு நடிகர் விஜய்யுடன் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் நடிகரும், இயக்குனருமான மனோபாலா தனது ட்விட்டர் பக்கத்தில் ‘தளபதி 67’ படப்பிடிப்பு தொடங்கிவிட்டதாக தெரிவித்துள்ளார். அதில் ‘தளபதி 67 படப்பிடிப்பு இன்று தொடங்குகிறது. லோகேஷ் மற்றும் எங்கள் தளபதியை சந்தித்தேன். அதே ஆற்றலுடனும், முழு வீச்சிலும், முதல் நாளே, தூள்’ என்று பதிவிட்டுள்ளார். மனோபாலாவின் இந்த ட்வீட் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.