மன்னர் சார்லஸ்: இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசெபத் கடந்த ஆண்டு செப்டம்பரில் உடல் நலக்குறைவால் மரணமடைந்ததைத் தொடர்ந்து 74 வயதான அவரது மகன் மூன்றாம் சார்லஸ் இங்கிலாந்து மன்னராக பதவியேற்றார். இதைத்தொடர்ந்து அவரது அதிகாரப்பூர்வமான முடிசூட்டு விழா வரும் மே 6ம் தேதி நடக்க உள்ளது.
லண்டனில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் அபேயில் பாரம்பரிய வழக்கப்படி நடக்கும் விழாவில் இங்கிலாந்து மன்னராக சார்லசும், ராணியாக கமிலாவும் முடி சூட உள்ளனர். கடைசியாக கடந்த 1953ம் ஆண்டு ராணி 2ம் எலிசெபத் முடிசூடிய பிறகு 70 ஆண்டுகளுக்குப் பிறகு அரச குடும்பத்தில் நடக்கும் முடிசூட்டு விழாவை இங்கிலாந்து மக்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்துள்ளனர்.
இந்த விழாவிற்காக சார்லசும் அவரது மனைவி கமிலாவும் பக்கிங்காம் அரண்மனையிலிருந்து வெஸ்ட்மினிஸ்டர் அபேவுக்கு டைமண்ட் ஜூபிலி ஸ்டேட் சாரட் வண்டியில் பயணிப்பார்கள். இந்த சாரட் வண்டியில் குளிரூட்டப்பட்ட கேபினில் சார்லசும், கமிலாவும் பயணிப்பார்கள்.
அதைத் தொடர்ந்து மன்னராக சார்லஸ் முடிசூட்டிய பின் பக்கிங்காம் அரண்மனைக்கு பாரம்பரியமான கோல்டு ஸ்டேட் சாரட் வண்டியில் திரும்புவார். 8 குதிரைகள் பூட்டப்பட்ட இந்த சாரட் வண்டி சுமார் 260 ஆண்டுகள் பழமையானது. ஒவ்வொரு முடிசூட்டுவிழாவிலும் இந்த வண்டி பாரம்பரியமாக பயன்படுத்தப்படுகிறது.
மேலும் மன்னர் சார்லசுக்கு முடிசூட்டிய பின் செயின்ட் எட்வர்ட்டின் விலை உயர்ந்த கிரீடம் சூட்டப்படும். இந்த கிரீடத்தில் வைரம், வைடூரியம், மரகதம் என 444 விலையுயர்ந்த கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. ராணி கமிலாவுக்கு மரகத கல் பதித்த மோதிரம் அணிவிக்கப்படும். மேலும் பல்வேறு பாரம்பரிய பொருட்களுடன் ராஜ அலங்கார நிகழ்ச்சிகளும் நடக்கும். இதில் இடம் பெறும் பல பொருட்களும் 1000 ஆண்டுகள் பழமையானது.