திருமலை திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 2ம் தேதி முதல் 11ம் தேதி வரை வைகுண்ட ஏகாதேசியை முன்னிட்டு சொர்க்க வாசல் திறந்திருக்கும். எனவே வைகுண்ட ஏகாதேசியை முன்னிட்டு திருமலையில் இருக்கும் அன்னமய்யா பவனில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி கூறுகையில், திருப்பதியில் 10 இடங்களில் 100 கவுண்டர்கள் அமைத்து ஐந்து லட்சம் இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்க உள்ளதாக தெரிவித்தார்.
அதேபோல் நாட்டில் கொரோனா பரவல் மீண்டும் பரவி வருவதை கருத்தில் கொண்டு மத்திய மாநில அரசுகளின வழிகாட்டுதலின் படி திருப்பதிக்கு வரும் பக்தர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். தரிசனத்திற்காக டிக்கெட் வாங்கிய பக்தர்கள் மட்டுமே சுவாமி தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுவார்கள். டிக்கெட் இல்லாத பக்தர்களை தரிசனத்திற்கு அனுமதிக்க இயலாது எனவும் அவர் தெரிவித்தார்.