திருமலை திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரமோற்சவ விழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முன்னதாக வெங்கடேஸ்வர பெருமாளின் சேனாதிபதியான விஸ்வசேனாதிபதி மாட வீதி உலா இன்று நடக்கிறது. அப்போது ஈசானி மூலையில் உள்ள புற்றுமண் சேகரிக்கப்பட்டு விஸ்வசேனாதிபதி ஊர்வலத்துடன் கோயிலுக்கு கொண்டு வந்து அங்குரார்ப்பண மண்டபத்தில் 9 பானைகளில் புற்று மண்ணை நிரப்பி நவதானியங்களுடன் சிறப்பு பூஜை நடத்தப்படுகிறது. இதைத் தொடர்ந்து நாளை பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
முதல் நாளான நாளை மாலை 5.45 மணி முதல் 6.15 மணிக்குள் பிரமோற்சவ கொடியேற்றம் நடைபெறும். அன்று முதல் நவராத்திரி வரை 9 நாட்களுக்கு காலை மற்றும் மாலை நேரங்களில் சுவாமி பல்வேறு வாகனங்களில் மாட வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். அதன்படி நாளை இரவு பெரிய சேஷவாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி வலம் வருகிறார். பிறகு, 9 ம் நாள் மற்றும் இறுதி நாளான வரும் அக்டோபர் 5ம் தேதி காலை சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெறும். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடுவவர்.
அன்று பிரமோற்சவம் சிறப்பாக நடைபெற்று முடிந்த பிறகு மாலை கோயிலுக்குள் உள்ள தங்க கொடிமரத்தில் ஏற்றப்பட்ட கருடர் கொடி, வேத மந்திரங்கள் முழங்க இறக்கப்பட்டு நிறைவு செய்யப்படுகிறது. கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பாதிப்பின் காரணமாக திருப்பதியில் பிரமோற்சவ விழா மக்கள் ஆராவாரமின்றி நடைபெற்றது. இப்போது கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளதால் இந்த வருட பிரமோற்சவ விழாவில் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நாளை தொடங்க உள்ள பிரமோற்சவ விழாவை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயில் கோபுரங்கள், மாட வீதிகள், சுற்றுப் புற பகுதிகள் அனைத்தும் வண்ணமின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கிறது.