திருமலை திருப்பதி: வரும் அக்டோபர் 25ம் தேதி சூரியகிரகணம் மற்றும் நவம்பர் 8ம் தேதி சந்திரகிரகணம் வருவதையொட்டி 12 மணி நேரம் கோயில் நடை மூடப்படும் என திருப்பதி தேவஸ்தானம் தகவல் தெரிவித்துள்ளது. வருகின்ற அக்டோபர் 25ம் தேதி(செவ்வாய் கிழமை) சூரிய கிரகணம் வருகிறது. அதன்படி அன்று மாலை 5.11 மணி முதல் 6.27 மணி வரை சூரிய கிரகணம் நிகழும். அதனால் திருப்பதி ஏழுமலையான் கோயில் அன்று காலை 8.11 மணி முதல் இரவு 7.30 மணி வரை தொடர்ந்து 12 மணி நேரம் மூடப்பட்டிருக்கும். அதன் பிறகுதான் பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட உள்ளனர்.
அதேபோல் நவம்பர் 8ம் தேதி பிற்பகல் 2.39 மணி முதல் 6.27 மணி வரை சந்திரகிரகணம் நிகழவுள்ளது. அன்றைய தினமும் கோயில் கதவுகள் காலை 8.40 மணி முதல் இரவு 7.20 மணி வரை மூடப்பட்டிருக்கும். அன்றைய தினமும் கோயில் 12 மணி நேரம் மூடப்பட்டிருக்கும். அதன் பிறகு பக்தர்கள் கட்டணமில்லா தரிசனத்தில் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். எனவே விஐபி தரிசனம், ஸ்ரீவாணி தரிசனம், ரூ.300 மதிப்புள்ள சிறப்பு தரிசனம் மற்றும் கட்டண சேவைகளுக்கான அனைத்தும் ரத்து செய்யப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. அதனால் கட்டணமில்லா தரிசனத்தில் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.
மேலும் பொதுவாக கிரகண நாட்களில் கிரகணம் முடியும் வரை சமைக்ககூடாது. அதனால் திருமலையில் உள்ள மாத்ருஸ்ரீ தரிகொண்டா வெங்கமாம்பா அன்னபிரசாத பவன் மற்றும் தரிசனத்திற்கு செல்லும் வைகுண்ட காம்ப்ளக்ஸில் அன்னபிரசாதம் வழங்கப்படாது என்றும் திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.