சூரசம்ஹாரம்: ஆண்டுதோறும் திருச்செந்தூர் முருகன் கோயிலில் கந்த சஷ்டி திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன் படி இந்த ஆண்டுக்கான கந்த சஷ்டி திருவிழா கடந்த 25ம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் அதிகாலையில் நடை திறக்கப்பட்டு, விஸவரூப ஆராதனை, உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடப்பது வழக்கம். அதை தொடர்ந்து விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று மாலை நடைபெற்றது. இதை முன்னிட்டு இன்று அதிகாலை 1மணியளவில் நடை திறக்கப்பட்டு 1.30 மணிக்கு விஸ்வரூப ஆராதனை, 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாரதனை நடைபெற்றது. மாலை 4 மணியளவில் சுவாமி ஜெயந்திநாதர் சூரசம்ஹாரத்திற்கு எழுந்தருளினார்.
சூரசம்ஹாரத்திற்காக சுவாமி ஜெயந்திநாதர் கடற்கரைக்கு வருகை தந்தார். முதலில் யானை முகம் கொண்ட தாராகசுரனை வதம் செய்தார். இரண்டாவதாக சிங்க முகம் கொண்ட சிங்கமுகாசுரனை வேலால் வதம் செய்த நிகழ்வு நடைபெற்றது. தொடர்ந்து தலையை ஆட்டியபடி முருகனுடன் போரிட வந்தான் சூரபத்மன். பின்னர் தன்முகத்துடன் எழுந்தருளிய சூரபத்மனை வதம் செய்தார் சுவாமி ஜெயந்திநாதர். மாமரமாகவும், சேவலாகவும் மாறி முருகனுடன் போரிட வந்தான் சூரபத்மன். சூரனை சம்ஹாரம் செய்து சேவற்கொடியாகவும், மயிலாகவும் ஜெயந்திநாதர் ஆட்கொண்டார். இந்நிகழ்ச்சியை காண ஏராளமான பக்தர்கள் திருச்செந்தூர் முருகன் கோயிலில் திரண்டுள்ளதால் 2000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.