பராக் அகர்வால்: உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க், ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவதாக அறிவித்து ரூ.3.5 இலட்சம் கோடிக்கு ஒப்பந்தம் செய்திருந்தார். ஆனால் திடீரென்று ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக எலான் மஸ்க் தெரிவித்தார். ட்விட்டரில் உள்ள போலி கணக்குகள் குறித்த விவரங்களை தராததால் ஒப்பந்தத்தை ஏற்க முடியாது என்று அவர் தெரிவித்தார். இதனால் மஸ்க் மீது ட்விட்டர் நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் இன்று (அக்டோபர் 28) ஒப்பந்தத்தை இறுதி செய்ய கெடு விதித்தது.
இந்நிலையில் எலான் மஸ்க் நேற்று சான் பிரான்சிஸ்கோவில் உள்ள ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை அலுவலக்த்துக்கு சென்றார். இதன் மூலம் ட்விட்டரை வாங்கும் ஒப்பந்தத்தை எலான் மஸ்க் ஏற்றுக்கொண்டு விட்டதாக தகவல் வெளியானது. இதனால் நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில், எலான் மஸ்க் ஒப்பந்தம் முடிந்து ட்விட்டர் நிறுவனத்தின் உரிமையாளாராக மாறிவிட்டதாக தெரிவித்துள்ளது.
ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய கையோடு எலான் மஸ்க் அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருந்த பராக் அகர்வாலை அதிரடியாக பணி நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளார். ட்விட்டர் நிறுவனத்திலிருந்து வெளியேறும் பராக் அகர்வால் வெறும் கையுடன் வெளியேறப்போவதில்லை. ஏற்கனவே அவருடன் செய்யப்பட்ட ஒப்பந்தத்தின்படி அவருக்கு சுமார் 42 மில்லியன் டாலர்கள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. பராக் அகர்வால் பணியில் சேரும்போதே ட்விட்டர் நிறுவனத்திலிருந்து பணி நீக்கம் செய்யப்பட்டால் அவருக்கு இழப்பீடாக அமெரிக்க டாலரில் 42 மில்லியன் டாலர் (இந்திய ரூபாயில் 345 கோடி) வழங்க வேண்டும் என்று ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது.
ட்விட்டர் நிறுவனத்தில் பராக் அகர்வால் ஆண்டுக்கு இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 8 கோடி ரூபாய் அடிப்படை ஊதியமாக பெற்று வந்தார். தவிர ட்விட்டர் நிறுவனத்தில் ரூ.96 கோடி மதிப்பிலான பங்குகளும் அவருக்கு வழங்கப்பட்டிருந்தது. கடந்த பிப்ரவரி முதல் அவருக்கு சம்பள உயர்வும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.