வாத்தி: மலையாளத்தில் ‘பாப்கார்ன்’ என்ற படத்தில் அறிமுகமாகி சில படங்களில் நடித்துள்ளவர் சம்யுக்தா மேனன். தமிழில் ‘களரி’, ‘ஜீலை காற்றில்’ ஆகிய படங்களில் நடித்தார். தற்போது தனுஷ் ஜோடியாக ‘வாத்தி’ படத்தில் நடித்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கில் வெங்கி அட்லூரி இயக்கியுள்ள இதில் சமுத்திரக்கனி, தணிகலபரணி, சாய்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் குறித்து சம்யுக்தா கூறியதாவது.
1990 முதல் 2000 வரை கல்வியில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து இப்படம் பேசுகிறது. கல்வி வியாபாரமாகி விட்டதால் ஏற்படும் பிரச்சினைகள் பற்றியும் சொல்லப்படுகிறது. கல்வியில் மாற்றத்தை கொண்டு வர போராடும் ஆசிரியர், ஆசிரியை பற்றிய கதை இது. ஆசிரியராக தனுஷ், ஆசிரியையாக நான் நடித்துள்ளோம். இந்த படம் கல்வி அமைப்பு பற்றியது. ஒருவர் விரும்புவதை படிக்க ஆதரவளிக்க வேண்டும். விரும்பாததை திணிக்கக் கூடாது.
நான் பிளஸ் 2 வரை தான் படித்திருக்கிறேன். நான் பாலக்காடு பெண் என்றாலும் தமிழில் பேசுவேன். இப்போது தெலுங்கு கற்றுக்கொண்டேன். நேரம் இல்லாததால் ‘வாத்தி’ படத்தில் டப்பிங் பேசவில்லை. தமிழ்தான் எனக்கு மிகவும் பிடித்த மொழி. தமிழ் இலக்கணங்களை கற்றுக்கொள்ளவும் ஆசை. ‘வாத்தி’ பட டைட்டில் உள்பட எதிலும் எனது பெயருக்குப் பின்னால் இருக்கும் ‘மேனன்’ என்ற சாதி அடையாளத்தை நீக்கச் சொல்லிவிட்டேன். சாதி அடையாளத்தை போட்டுக் கொள்வதில் எனக்கு உடன்பாடில்லை. சாதியிலும் உடன்பாடில்லை. மீடியாக்களும் என்னை சம்யுக்தா என்று மட்டுமே குறிப்பிட விரும்புகிறேன் என்று அவர் கூறினார்.