கொல்லிமலை: நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள 14 ஊராட்சிகளில் வசிக்கும் மக்கள் தங்கள் பிள்ளைகளை அந்தந்த பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் சேர்த்து படிக்க வைத்து வருகின்றனர். இந்நிலையில் குண்டூரை சேர்ந்த முத்துசாமி-தங்கமணி தம்பதியரின் மகன் வெற்றிமுருகன் கொல்லிமலையில் உள்ள மாதிரி அரசு பள்ளியில் படித்து முதல் முறையாக நீட் தேர்வெழுதி 7.5% இட ஒதுக்கீட்டில் பழங்குடியினர் பிரிவின் கீழ் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரியில் சேர்ந்துள்ளார்.
கொல்லிமலை அரசு பள்ளியில் படித்து இதுவரை எவர் ஒருவரும் மருத்துவர் ஆகாத நிலையில் தற்போது வெற்றிமுருகன் நீட் தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்திருப்பது வெற்றிமுருகனின் பெற்றோருக்கும், ஆசிரியர்களுக்கும், அப்பகுதி மக்களுக்கும் மிகுந்த பெருமையையும், மகிழ்ச்சியையும் அளித்துள்ளது. தன்னம்பிக்கையோடும், விடாமுயற்சியோடும் படித்ததால் தற்போது தேர்வில் வெற்றி பெற்று இருப்பதாகவும், மருத்துவராகும் தனது கனவு நனவாகி இருப்பதாகவும் வெற்றி முருகன் தெரிவித்துள்ளார். மேலும் மருத்துவராகி தங்கள் பகுதி மக்களுக்கு சேவை ஆற்றுவதே தனது விருப்பம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.