அரசு பேருந்துகள் தனியார் மயமாக்கப்படும் என்ற பேச்சுக்கே இடமில்லை என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார்.
பெரம்பலூர் மாவட்டம், மேல உசேன் நகரம் கிராமத்தில் ரூ.1 கோடியே 28 லட்சம் மதிப்பிலான மறுசீரமைப்பு குடிநீர் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய பின்பு பத்திரிகையாளர்களிடம் பேசிய போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கரிடம், அரசு பேருந்துகள் தனியார் மயமாக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வருகிறதே?” என்று கேள்வி எழுப்பியதற்கு, அரசு பேருந்துகள் தனியார் மயமாக்கப்படும் என்ற பேச்சுக்கே இடமில்லை.

இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு மாணவர்களுக்கு இலவச பயணத் திட்டம், பெண்களுக்கு இலவச பயணத்திட்டம் என பல்வேறு திட்டங்களைத் தமிழக முதல்வர் வழங்கி வருகிறார்கள். இந்தத் திட்டங்கள் அனைத்தும் தொடரும். சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் துறையை ஏன் தனியாருக்குக் கொடுக்கவேண்டும். தனியார் மயம் என்ற பேச்சுக்கு இடமில்லை.
அரசு பேருந்துகள் மூலம் பார்சல் அனுப்பும் திட்டம் வருகிற ஆகஸ்ட் 3 ம் தேதியிலிருந்து அமலுக்கு வர உள்ளது. பேருந்தில் உள்ள சுமைப் பெட்டிக்கு மாத வாடகை மற்றும் தினசரி வாடகை செலுத்தி குறைந்த அளவிலான பொருட்களை அனுப்பலாம். மேலும், தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்குப் புதிதாக 2,000 பேருந்துகள் வாங்கப்பட உள்ளது.
சென்னையில் தனியார் பேருந்துகள் இயக்க அனுமதி வழங்கப்பட உள்ளதாக உலவும் தகவல் குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, சென்னையில் அரசு பேருந்துகள் மட்டுமே இயக்கப்படும். தனியார் பேருந்துகளுக்கு அனுமதி கிடையாது என்றும் தெரிவித்தார்.