ஏகே-62: அஜித்தின் ‘துணிவு’ படத்தை தொடர்ந்து அடுத்த படத்துக்கான அறிவிப்புக்காக ரசிகர்கள் பெரும் ஆவலோடு காத்திருக்கிறார்கள். ஏற்கனவே அஜித்தின் 62வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்க போவதாக தயாரிப்பு நிறுவனமான லைகா அறிவித்திருந்தது. ஆனால் விக்னேஷ் சிவனின் கதை பிடிக்காததால் தயாரிப்பு நிறுவனம் அவரை படத்திலிருந்து ஏற்கனவே விலக்கி விட்டது. அதைத் தொடர்ந்து அஜித்தின் 62 வது படத்தை யார் இயக்க போகிறார்கள் என்ற குழப்பம் சினிமா வட்டாரத்துக்குள்ளயும், ரசிகர்களிடையேயும் நிலவி வருகிறது.
இதனிடையே தடையறத்தாக்க, தடம், மீகாமன், கலகத் தலைவன் ஆகிய படங்களை இயக்கிய மகிழ் திருமேனி அஜித்திடமும், லைகா நிறுவனத்திடமும் கதை சொல்லி ஓகே சொல்லியிருப்பதாகவும், அதற்கான அட்வான்ஸ் பணத்தை வாங்கி விட்டதாகவும் தகவல்கள் பரவின. இதனடிப்படையில் வரும் ஏப்ரல் மாதம் படப்பிடிப்பு தொடங்கினால் 2023ம் ஆண்டு இறுதிக்குள்ளோ அல்லது 2024 அன்று பொங்கலன்றோ படம் வெளியாகலாம் என்றும் பேசப்பட்டு வந்தன. ஆனால் எந்த ஒரு அதிகாரப்பூர்வமான தகவலும் வெளியாகாததால் ரசிகர்கள், சினிமா விமர்சகர்கள், பத்திரிக்கையாளர்கள் அனைவரும் ஏகே62 படத்தின் அப்டேட்டுக்காக பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் அஜித்தை வைத்து ஏற்கனவே இயக்கிய வெங்கட் பிரபு அஜித்தின் 62வது படத்தை இயக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியது. ஆனால் வெங்கட் பிரபு ஏற்கனவே நாகசைதன்யாவை வைத்து படம் இயக்கிக்கொண்டிருப்பதால் தற்போது இவர்களின் கூட்டணி சாத்தியமில்லை என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் ஏகே62 குறித்த அறிவிப்பை இந்த வார இறுதிக்குள் தயாரிப்பு நிறுவனம் வெளியிடும் என்ற தகவல் வெளியாகியிருப்பதால் ரசிகர்ளின் எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது என்றே கூறலாம்.