ஐநா சபை: கர்நாடகா மாநிலம் பிடதியில் ஆசிரமம் நடத்தி வந்த சாமியார் நித்யானந்தா பாலியல் குற்றங்களில் சிக்கியதையடுத்து வெளிநாட்டுக்கு தப்பி ஓடி கைலாசா என்ற நாட்டை உருவாக்கினார். அந்த நாட்டுக்கென தனிக்கொடி, நாணயம், காவல்துறை, வெளியுறவுத்துறை, பாஸ்போர்ட் உள்ளிட்டவற்றையும் வடிவமைத்து வெளியிட்டார். பல்வேறு நாடுகளுடன் தூதரக உறவு, பொருளாதார உறவு வைத்துள்ளதாக கூறிவரும் நித்யானந்தா அது தொடர்பான தகவல்களை இணையதளத்தில் வெளியிட்டார். மேலும் கைலாசா நாட்டை அமெரிக்கா, ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரித்துள்ளதாகவும் அதன் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் கடந்த 22ம் தேதி ஜெனிவாவில் நடந்த ஐக்கிய நாடுகள் கூட்டத்தில் நித்யானந்தாவின் கைலாசா நாட்டின் பெண் பிரதிநிதிகள் பங்கேற்றனர். கைலாசா நாட்டின் சார்பில் விஜய பிரியா நித்யானந்தா, ஐநாவுக்கான நிரந்தர தூதர் முக்திகா ஆனந்தா உள்ளிட்ட குழுவினர் பங்கேற்றனர். அவர்கள் உலகில் பெண்களுக்கு பாலியல் அடிப்படையிலான வேறுபாடுகள், துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதை புள்ளிவிவரங்களோடு குறிப்பிட்டனர். பெண்கள் உரிமைகளைக் காக்க அவசரமாக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் குரல் கொடுத்துள்ளனர்.