புனித ஹஜ் யாத்திரைக்கு விண்ணப்பிக்கும் அனைவருக்கும் அனுமதி வழங்கப்படும் எனவும், அதன் காரணமாக சென்னையிலிருந்து நேரடியாக விமான சேவை இந்த வாரத்தில் தொடங்கும் என ஹஜ் கமிட்டு தலைவர் அபுபக்கர் தெரிவித்துள்ளார்.
இஸ்லாமியர்களின் புனித பயணமாக கருதப்படும் மெக்காவிற்கு செல்ல அனைவரும் ஆவலுடன் எதிர்பார்பார்கள். ஐம்பெரும் கடமைகளில் இறுதிக் கடமையான ஹஜ் புனித யாத்திரைக்கு செல்ல அனைவருக்கும் அனுமதி கிடைத்துள்ளது.
கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக, கடந்த 2020- ஆம் ஆண்டில் உள்நாட்டைச் சேர்ந்த 1,000 யாத்திரீகர்கள் மட்டுமே ஹஜ் யாத்திரைக்கு அனுமதிக்கப்பட்டனர். அதைத் தொடர்ந்து, கடந்த 2021- ஆம் ஆண்டு கரோனா தடுப்பூசியை முழுமையாகச் செலுத்திக் கொண்ட உள்நாட்டைச் சேர்ந்த 60,000 பேர் வரை, குலுக்கள் முறையில் தேர்வு செய்யப்பட்டு அனுமதி வழங்கப்பட்டது.
ஆண்டுதோறும் உலகில் உள்ள அனைத்து நாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பயணிகள் முஹம்மது நபியின் பிறந்த ஊரான மக்கா, மற்றும் அவரது நினைவிடம் அமைந்துள்ள மதினா நகரங்களுக்கு புனித யாத்திரை செல்கின்றனர்.
மக்கா நகரில் உள்ள பெரிய மசூதியில் தொழுகையை முடித்து விட்டு மினா நகருக்கு செல்வர் அங்கு அவர்கள் சில சடங்குகளை செய்து விட்டு, அரபா நகரில் சாத்தான் மீது கல் எரியும் நிகழ்வையும் செய்வார்கள்.
இறைவனின் கட்டளை ஏற்று இறைத்தூதரான இபுறாஹிம் நபி, தனது ஒரே மகனான இஸ்மாயீலை பலியிட சித்தமான வரலாற்றை நினைவுகூரும் அரபாத் மலையை வலம்வந்த பின்னர், முசதல்பியா என்ற வெட்டவெளியில் கூழாங்கற்களை சேகரித்து, ஜம்ராத் என்ற இடத்தில் தீமையான ஆசைகளான சாத்தான் மீது கல்லெறியும் சடங்கையும் யாத்ரீகர்கள் நிறைவேற்றுவார்கள்.
பின்னர், தங்களது விருப்பம்போல் ஆடு மற்றும் ஒட்டகங்களை ‘குர்பானி’ (இறைவனின் பெயரால் புனிதப் பலி) செய்துவிட்டு, தங்களது பாவங்கள் அனைத்தும் கழுவப்பட்டவர்களாக அன்று பிறந்த குழந்தையைப் போல் ‘ஹாஜி’ என்ற பட்டத்துடன் தங்களது இல்லங்களுக்கு புறப்பட்டுச் செல்வர்.