திருக்குறள்: காரைக்குடியில் டிரோனில் பறக்க விடப்பட்ட 133 அடி உயர திருக்குறளை அமைச்சர் பெரியகருப்பன் வெளியிட்டார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த விவசாயி சின்னபெருமாள் ஓவிய வடிவில் எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு 1330 திருக்குறளையும் 133 அடி உயர காகிதத்தில் எழுதியுள்ளார். இது டிரோன் மூலம் 133 அடி உயரத்துக்கு பறக்க விடப்பட்டது. அமைச்சர் பெரியகருப்பன் இதை துவக்கி வைத்தார்.
கலெக்டர் மதுசூதனன்ரெட்டி, முன்னாள் அமைச்சர் தென்னவன், எம்எல்ஏ மாங்குடி உள்பட பலர் கலந்து கொண்டனர். இது குறித்து சின்னபெருமாள் கூறுகையில்,
‘உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு திருக்குறள் எழுத்தோவியத்தை 133 அடி உயரத்தில், 1330 குறளையும் வண்ண எழுத்துக்களால் எழுதியுள்ளேன். திருவள்ளுவர் உருவத்தில் குறளின் பெருமைகள் எழுதப்பட்டுள்ளது. அதன் கீழே அதிகாரத்தை தனியாக பிரித்தும் எழுதியுள்ளேன். இதனை வான் பரப்பில் டிரோன் மூலம் 133 அடிக்கு தூக்கி செல்லப்பட்டது’ என்று அவர் கூறினார்.
புத்தகம் வாசிக்கும் பழக்கம் தற்போது குறைந்து வருவதால் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.